சில நாட்களின் முன்னர், கிராமமட்ட பிரமுகர் ஒருவரை, முல்லைத்தீவு இராணுவ முகாமின் புலனாய்வு அதிகாரியென அடையாளப்படுத்திய ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த கிராமத்தில் தொல்பொருள் அகழ்வு மேற்கொள்ளக்கூடிய இடங்கள் உள்ளதா என வினவியுள்ளனர், அவர் இல்லையென மறுத்தபோது, “இல்லை… அங்கு தொல்பொருள் சின்னங்கள் சிதைவடைந்த நிலையில் உள்ளன என எமக்கு தகவல் வந்துள்ளது“ என கூறியதாகவும், கிராம மக்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் காலையிலிருந்து இன்று வரை பல முறை புலனாய்வாளர்கள் கிராம மட்ட பிரமுகர்களை தொலைபேசியில் தகவல்களை வினவியுள்ளனர். எனினும், அப்படியான தகவலெதுவும் தமக்கு தெரியாதென அவர்கள் கூறியதையடுத்து, நேற்று முதல் அங்கு இராணுவ அணியொன்று களமிறக்கப்பட்டுள்ளது. நேற்று மேலும் பல இராணுவத்தினர் அந்த காட்டுக்குள் களமிறக்கப்பட்டனர். காட்டுக்குள் இராணுவத்தினர் களமிறக்கப்பட்ட தகவலையடுத்து கிராம மக்களிடம் பதற்றம் ஏற்பட்டது.
அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவலை தெரிவித்தனர். வன்னி எம்.பி வினோநோகராதலிங்கம் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்றார். கிராம மக்களும், அவரும் காட்டுக்குள் நுழைந்த போதும் இராணுவத்தினரை காண முடியவில்லை. இன்று மாலை மங்கி விட்டதால் அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். இன்று வினோ நோகராதலிங்கம் தலைமையில் மீண்டும் காட்டுக்கு செல்வதென முடிவெடுக்கப்பட்டது. மன்னாகண்டல் தொடக்கம் கற்பூரபுல்வெளி வரையான பகுதிகளில் வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் கால எச்சங்கள் நிறைந்துள்ளன. கற்பூர புல்வெளியில் குருவிச்சை நாச்சியார் தங்கியிருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. பண்டார வன்னியனின் கால எச்சங்கள் உள்ள பகுதிக்கு அண்மையாகவே அந்த கிராமம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. |