தமிழர் தாயகத்தை துண்டாடவும், இனப்பரம்பலை மாற்றியமைத்து தமிழர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மகாவலி L வலயத்தினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக 6000 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு 9 சிங்கள கிராம சேவையாளர் பிரிவுகளைக்கொண்ட வெலிஓயா (மணலாறு) பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
மகாவலி இதுவரை காலமும் தனது செயற்பாடுகளை வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுடன் மட்டுப்படுத்தியிருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் கருநாட்டுக்கேணி கடற்கரையில் எட்டு சிங்கள மீனவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியதனூடாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.
மேலும், முன்மொழியப்பட்ட மகாவலி “K” மற்றும் “J” வலையமூடாக வடக்கின் பெரும்பகுதி காணி அதிகாரம் மகாவலி அதிகார சபையின் கீழ் செல்லக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ள நிலையில் காணி அதிகாரங்களை பறிக்கப்பட்ட இனப்பிரச்சனை தீர்வானது உப்புச்சப்பற்றதாகவே இருக்கும்.
தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத சிங்கள குடியேற்றங்களை மட்டுமே இலக்காகக்கொண்ட மகாவலி திட்டத்தினை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
மேற்படி விடயம் தொடர்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை 28.08.2018 அன்று நடாத்த அழைப்பு விட்டிருக்கின்ற அறவழிப் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவிப்பதோடு இப்போராட்டத்தை கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு எம் இனிய மக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
செல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர், TELO