மாத்தளை லக்கல காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள் தொடர்பில், குறித்த நேரத்தில் கடமையில் இருந்த 4 காவல்துறை அலுவலர்களில் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி காவல்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 1 மணியளவில் லக்கல காவல் நிலையத்தில் இருந்து இவ்வாறு ஆயுதங்கள் காணாமல் போயிருந்தன.
காவல்நிலையத்தின் ஆயுத களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த ரி.56 ரக துப்பாக்கி மற்றும் 5 கைத்துப்பாக்கிகள் என்பவற்றை இனந்தெரியாத ஒருவர் கொள்ளையிடடுச் சென்றுள்ளார்.
சம்பவத்தின் போது கடமையில் இருந்த 4 காவல்துறை அலுவலர்கள் மது அருந்தி இருந்தார்களா? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அவர்கள் மதுபோதையில் இருக்கவில்லை என்று ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்தது.
இதனிடையே, சம்பவம் தொடர்பிலான விசாரணை குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.